தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் இப்போது ரூ. 125 கோடி சம்பளம் வாங்குகிறார். கமல்ஹாசன் ரூ. 150 கோடி சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்த் நடிக்க வந்த புதிதில், அறிமுக நடிகராக மிக குறைந்தபட்ச சம்பளம்தான் பெற்றிருப்பார். அதுபோல் நடிகை ஸ்ரீதேவியும், தமிழ் படங்களில் அறிமுகமான காலகட்டத்தில் குறைந்தபட்ச சம்பளம்தான் பெற்றிருக்க முடியும். ஆனால், இப்போதைய நடிகர்கள் ஓரிரு படங்களில் நடித்து விட்டாலே கோடிகளில்தான் சம்பளம் வாங்குகின்றனர். படத்தின் வெற்றி தோல்விகளை பொருத்து, ரசிகர்களின் வரவேற்பை பொருத்து, அன்று தயாரிப்பாளர்கள் நடிகர்களின் சம்பளத்தை தீர்மானித்தனர். ஆனால், இன்று நடிகர்களே தங்களது சம்பளத்தை முடிவு செய்துவிடுகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் பிரகாஷ் ராஜ், விஜய் டிவியில் கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சியை தொகுப்பாளராக பங்கேற்று நடத்தினார். சிறப்பு அழைப்பாளராக, அதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி பங்கேற்று பேசி இருக்கிறார். அப்போது கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி மூவரும் இணைந்து நடித்த மூன்று முடிச்சு படம் குறித்து பிரகாஷ் ராஜ் கேட்கிறார். அதற்கு நடிகை ஸ்ரீதேவி பதிலளித்து கூறுகையில், இந்த படத்தில் நடிக்கும்போதே கமல் பெரிய நடிகர். அதனால் அவரது சம்பளம் 30 ஆயிரம் ரூபாய். எனக்கு சம்பளம் 5 ஆயிரம் ரூபாய். ரஜினிக்கு சம்பளம் 2 ஆயிரம் ரூபாய்.
அப்போது ரஜினி என்னிடம் பேசும்போது, நானும் கமல் போல் ஹீரோவாக வர முடியுமா, அவரை போல நல்ல சம்பளம் வாங்குவேனா எனக் கேட்பார். கண்டிப்பா நீங்களும் பெரிய ஹீரோவா நடிப்பீங்க என்று நான் சொன்னேன். ரஜினி மிகவும் சிறந்த மனிதர். நல்ல இதயம் கொண்டவர். அன்பானவர் என்று அந்த நேர்காணலில், ரஜினியை பாராட்டி இருக்கிறார் ஸ்ரீதேவி. 1980களில், ரஜினிக்கு பல படங்களில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதேவி. அதே போல், கமலுக்கும் பல வெற்றிப் படங்களில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதேவி என்பதும் குறிப்பிடத்தக்கது.