தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது.
அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார். அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான். அதிலிருந்து இப்போது வரை தமிழ் சினிமாவின் மாஸ் மகாராஜாவாக இருக்கிறார். தற்போது தன்னுடைய 73 வயதிலும் தன்னுடைய அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜித் ஆகியோருக்கு போட்டியாக களத்தில் நிற்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவரின் அடுத்த படமான ‘ஜெயிலர் 2’ படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோ வெளியானது. அதில் சில ஷாட்களில் நடித்திருப்பது ரஜினியே இல்லை என்றும் டூப் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அந்த கிள்ம்ப்ஸ் வீடியோவின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், அதில் ரஜினிகாந்த் நடித்துள்ளதை உறுதி செய்தது.

ரஜினிகாந்த் தன்னுடைய 49 ஆண்டுகால திரைவாழ்க்கையில் எத்தனையோ இயக்குனர்களோடு சேர்ந்து பணியாற்றியுள்ளார். அதில் அவரை அறிமுகப்படுத்திய பாலச்சந்தர் மேல் அவர் அளவற்ற அன்பும் மரியாதையும் வைத்திருந்தார். ஆனால் அவருக்குப் பிடித்த இயக்குனர் என்றால் அது வேறு ஒருவர்தான்.
இயக்குனர் சங்கத்தின் 40 ஆவது ஆண்டுவிழா மேடையில் ரஜினிகாந்தை பாலச்சந்தர் ஒரு நேர்காணல் செய்தார். அப்போது “உனக்குப் பிடித்த இயக்குனர் யார்?… என்னை விட்டுவிடு” எனக் கூற சற்றும் யோசிக்காமல் ரஜினிகாந்த் “மகேந்திரன்” என்றார். அந்த அளவுக்கு மகேந்திரன் மேல் மரியாதை வைத்திருந்தார் ரஜினிகாந்த். அவர்கள் இருவரும் முள்ளும் மலரும், ஜானி மற்றும் கைகொடுக்கும் கை ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
