ரஜினியின் 100-வது படத்தால் பெரிய நஷ்டம் அடைந்த பாலச்சந்தர் தயாரிப்பு கம்பனி.. இழப்பை ஈடுகட்ட சூப்பர்ஸ்டார் செய்த காரியம்..

By vinoth on மாசி 20, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நான்கு தசாப்தங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் அறிமுகமான ரஜினிகாந்த் விறுவிறுவென தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என நான்கு மொழிப் படங்களில் நடித்தார். முரட்டுக்காளை திரைப்படம் அடைந்த வெற்றியின் காரணமாக வசூல் மன்னனாக சூப்பர் ஸ்டாராக உருவானார்.

   

   

ஒருபக்கம் குடி, சிகரெட் போன்ற பழக்கங்கள் இருந்தாலும் ரஜினிகாந்துக்கு ஆன்மிகத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார். 80 களில் அவர் ராகவேந்திரர் பக்தராக இருந்த நேரத்தில் தன்னுடைய 100 ஆவது படமாக ராகவேந்திரா படம்தான் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.

 

அதே போல அவரின் 100 ஆவது படமாக ராகவேந்திரா படத்தை பாலச்சந்தரின் கவிதாலயா பிலிம்ஸ் தயாரிக்க, ரஜினியின் ஆஸ்தான இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்க, இளையராஜா இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான இந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

இதனால் கவிதாலயா நிறுவனத்துக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை ரஜினியிடம் சொல்ல முடியாமல் கவிதாலயா நிறுவனத்தினர் தர்ம சங்கடத்தில் நெளிந்துள்ளனர். ஆனால் அதைப் புரிந்துகொண்ட ரஜினி நஷ்டத்தை நிவர்த்தி செய்ய ரஜினிகாந்த், அடுத்து வேலைக்காரன் என்ற படத்தில் கவிதாலயா நிறுவனத்துக்கு சம்பளமே வாங்காமல் நடித்துள்ளார்.

இந்தப்படத்தில் ரஜினி, ஜனகராஜ், வி.கே.ராமசாமி ஆகியோர் நடிக்க,  ரஜினிக்கு ஜோடியாக அமலா நடித்திருந்தார். இந்த படத்தையும் எஸ் பி முத்துராமன் இயக்கி இருந்தார். இந்த படம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்து கமர்ஷியலாக இந்த படத்தை உருவாக்கியுள்ளார்கள். காஷ்மீருக்கெல்லாம் சென்று பாடல்காட்சிகளை படமாக்கி ரசிகர்களை பிரமிக்க வைத்தனர். படம் ரிலீஸான போது எதிர்பார்த்தது போலவே மிகப்பெரிய வெற்றி பெற்றது.