அண்ணாமலை படத்தில் இயக்குனரை நம்பாத ரஜினிகாந்த்… அதுக்கு அவர் சொன்ன காரணம் இதுதான்!

By vinoth on டிசம்பர் 26, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது.

அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார். அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான். அதிலிருந்து இப்போது வரை தமிழ் சினிமாவின் மாஸ் மகாராஜாவாக இருக்கிறார். தற்போது தன்னுடைய 73 வயதிலும் தன்னுடைய அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜித் ஆகியோருக்கு போட்டியாக களத்தில் நிற்கிறார்.

   

   

90 களை ரஜினிகாந்த் அவரது சினிமா வாழ்வின் உச்சத்தில் இருந்த நாட்கள் என சொல்லலாம். அந்தளவுக்கு மாஸ் ஹிட் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதில் ஒன்றுதான் 92 ஆம் ஆண்டு வெளியான அண்ணாமலைத் திரைப்படம். அந்த படத்துக்கு முதலில் இயக்குனராக ஒப்பந்தம் ஆனவர் வசந்த். ஆனால் ரஜினியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விலக சுரேஷ் கிருஷ்ணா அந்த படத்தை இயக்கினார்.

 

இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா “அண்ணாமலை படத்தில் இருந்து வசந்த் வெளியேறிய போது நான் உள்ளே வந்தேன். அதற்கு 2 நாள் கழித்து படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. அதற்குள்ளாக நான் என்னை அந்த படத்துக்குள் பொருத்திக் கொள்ள வேண்டி இருந்தது. முதலில் ரஜினி சார் என்னை நம்பவில்லை. ஒருவாரம் கழித்துதான் என் மேல் அவருக்கு நம்பிக்கை வந்தது.

அந்த பாம்புக் காட்சி எல்லாம் படமாக்கிய பிறகுதான் அவர் என்னை நம்பினார். ஒரு நாள் என்னிடம் வந்து சொன்னார் ‘சுரேஷ் முதலில் உன் மேல் எனக்கு நம்பிக்கையே இல்லை. ஏனென்றால் நீ பாலச்சந்தர் ஸ்கூலில் இருந்து வந்தவன். அது மட்டும் இல்லாமல் கமல் உன்னை அறிமுகப்படுத்தினார். நீ இயக்கிய படங்களும் வேறு மாதிரியானவை. ஆனால் என் ரசிகர்கள் ஆர்ப்பாட்டமான படங்களை எதிர்பார்ப்பார்கள். ஆனால் இப்போது நீ உன்னை நிரூபித்து விட்டாய் எனக் கூறினார்” என தெரிவித்துள்ளார்.