தமிழக அரசியலில் சினிமா பிரபலங்களின் வரத்து அதிகரித்து வரும் வேளையில், நடிகர் ராகவா லாரன்ஸ் தீவிர அரசியலில் களம் இறங்குவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார். திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் கசிந்ததை அடுத்து, தனது அரசியல் வருகை குறித்து ரசிகர்களிடம் கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வாக்காளர்களை நாய் உடன் ஒப்பிட்டு அவர் பேசியதாக எழுந்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் லாரன்ஸ் பேசுகையில், “ரோட்டில் இருக்கும் தெரு நாய்கள் கூட நம்மைப் பார்த்தால் சத்தம் போடும். சில நாய்கள் பிஸ்கட் சாப்பிடாது, பிரியாணி தான் சாப்பிடும். அதற்கு என்ன பிடிக்கிறது என்று பார்த்து நாம் கொடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவ, “தேர்தலில் ஓட்டுப் போடும் மக்களைப் போய் ராகவா லாரன்ஸ் தெரு நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசலாமா?” என்று நெட்டிசன்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்யத் தொடங்கினர். நிலைமை கையை மீறிப் போவதை உணர்ந்த லாரன்ஸ், “நான் பேசியதன் அர்த்தத்தை சிலர் தவறாகத் திரித்து அரசியல் செய்கிறார்கள்” என்று உடனடியாக இதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் தாடி பாலாஜி ராகவா லாரன்ஸிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அரசியலுக்கு வர வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்ட பிறகு வார்த்தைகளை எவ்வளவு கவனமாகப் பயன்படுத்த வேண்டும்? ஒரு ஆன்மீகவாதியாக இருந்து கொண்டு பொதுவெளியில் இப்படிப் பொறுப்பில்லாமல் மக்களை நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது மிகப்பெரிய தவறு. இன்னும் தேர்தல் வரவில்லை, உங்களை வேட்பாளராகவும் அறிவிக்கவில்லை. இப்போதே நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் உங்களை நம்பி களம் இறக்குபவர்களுக்கும் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே, மக்களிடம் நீங்கள் பேசிய வார்த்தைக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என தாடி பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.
மறுபுறம், இந்த விவகாரத்தில் குரல் கொடுத்துள்ள தாடி பாலாஜியின் அரசியல் நகர்வுகளும் தற்போது கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் தீவிரமாகப் பயணித்து, பின்னர் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்து, சமீபத்தில் அதிலிருந்தும் விலகியவர் பாலாஜி. லாரன்ஸின் இந்த சர்ச்சை பேச்சை அவர் கண்டித்துள்ள நிலையில், பாலாஜி மீண்டும் தவெகவிலேயே இணையப் போகிறாரா அல்லது அவரது அடுத்த அரசியல் அதிரடி என்னவாக இருக்கும் என்ற விவாதங்களும் சமூக வலைத்தளங்களில் பரவலாக எழுந்துள்ளன.
