பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா. இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையிலும் ராதிகா தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது ராதிகாவும் அவரது கணவர் சரத்குமாருடன் இணைந்து அரசியலில் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நடைபெறும் இந்த வேளையில் அவர் குறித்து ராதிகா பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து ராதிகா கூறியதாவது, நானும் கலைஞரும் பழகிய நாட்கள் ஒரு தந்தை மகளுக்கு இடையேயான உறவாக அமைந்தது. என்னால அதை மறக்கவே முடியாது. அவரைப்போல் என் மீது அன்பு காட்டிய இன்னொரு தலைவரை நான் இதுவரை பார்க்கவில்லை. நான் எதைப் பற்றி பேச வேண்டும் என சொன்னாலும் உடனே வீட்டுக்கு வா என சொல்லிவிடுவார். நான் வீட்டிற்கு சென்று அந்த விஷயம் பற்றி பேசி விடுவேன். 1989-ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுகவுக்காக நான் பிரச்சாரம் செய்தேன். தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன்.
அப்போது பிரச்சாரம் செய்ய நேரம் காலம் எல்லாம் கிடையாது. இதனால் காலை 9 மணிக்கு பிரச்சார வேனில் ஏறினால் அடுத்த நாள் அதிகாலை 3 மணி வரை பிரச்சாரம் நடைபெறும். பயண கலைப்பு என்று கூட பார்க்காமல் சிரித்த முகத்துடன் பொதுமக்களுடன் பேசுவேன். அதனை பார்த்த கலைஞர் தொலைபேசியில் என்னை அழைத்து பாராட்டுவார். ஒருமுறை திண்டுக்கல்லில் திமுகவுக்காக பிரச்சாரம் செய்தபோது மேடையில் பேசி விட்டு வேனிலிருந்து கீழே இறங்கினேன்.
அப்போது அதிகாலை 2 மணிக்கு பசி மயக்கத்தில் வேனுக்குள் மயங்கி விழுந்தேன். உடனடியாக என்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து அறிந்த கலைஞர் உடனே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு வருவதாக கூறினார். அரை மயக்கத்தில் இருந்த நான் அதெல்லாம் சரியாகி விட்டது நீங்கள் வர வேண்டாம் அப்பா என கூறினேன். அதன் பிறகு அவர் சமாதானமானார் என நடிகை ராதிகா கூறியுள்ளார்.