பாஜகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜவின் வாக்கு வங்கியை 3 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்திய மாநிலத் தலைவர் அண்ணாமலையை, கூட்டணி அரசியலுக்காக அக்கட்சியின் தேசிய தலைமை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டதாக அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் மாநிலத் தலைவர்களான தமிழிசை சௌந்தரராஜன், எல். முருகன் ஆகியோருக்குப் பதவிகள் வழங்கப்பட்ட நிலையில், அண்ணாமலைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய சூழலில் பாஜகவுக்கும் திமுகவுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை என கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், பாஜகவில் இருந்து வெளியேறினாலும், அண்ணாமலையின் தனிப்பட்ட தலைமையை ஏற்றுக்கொண்டே தனது அரசியல் பயணத்தைத் தொடரப் போவதாகவும் அமர்பிரசாத் ரெட்டி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
