தமிழக அரசியலில் நிலவும் முட்டுக்கட்டைக்கு பாஜகவே காரணம் என காங்கிரஸ் கட்சி நேரடியாகக் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஆட்சி அமைவதைத் தடுக்கும் நோக்கில் பாஜக அழுத்தம் கொடுத்து வருவதாகவும், அதன் பின்னணியிலேயே ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருவதாகவும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சி ஆட்சி அமைப்பதைத் தடுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசியல் நெருக்கடியைக் கண்டிக்கும் விதமாகவும், ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் காங்கிரஸ் கட்சி மாநிலம் தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது. “த.வெ.க ஆட்சி அமையக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் செயல்படும் பாஜக மற்றும் ஆளுநரைக் கண்டித்து, நாளை தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். விஜய்யின் கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ் களமிறங்கியிருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
