தமிழகத்தில் பத்திரப்பதிவு இணையதளத்தில் சில முக்கியத் திருத்தங்களை மேற்கொண்டு வருவாய்த்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி நிலத்தை விற்பனை செய்யும்போது, விற்பனையாளரின் குடும்ப உறுப்பினர்களும் ஆவணங்களில் கையெழுத்திட்டு நேரடியாக பட்டாவை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொது அதிகாரப் பத்திரம் (Power of Attorney) மூலம் நிலத்தை விற்பனை செய்யும்போது, விற்பனையாளரின் பெயரும் பட்டாதாரரின் பெயரும் ஒன்றுக்கொன்று பொருந்தாமல் (Mismatch) இருந்தாலும், இனி எவ்வித தடையுமின்றி நிலத்தினை எளிதாக விற்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சொத்து வாங்குவோரின் நீண்ட நாள் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள் அனைத்தும், அடுத்த 15 நாள்களுக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
