ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தூணாகக் கருதப்பட்ட ராகவ் சதா, அக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் சந்தீப் பதக், அசோக் மிட்டல், ஹர்பஜன் சிங், விக்ரம் சாஹ்னி மற்றும் சுவாதி மலிவால் உள்ளிட்ட 7 முக்கிய ராஜ்யசபா உறுப்பினர்களும் ஆம் ஆத்மியிலிருந்து வெளியேறியுள்ளனர். இவர்கள் அனைவரும் விரைவில் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணையவுள்ள நிலையில், இது அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பேரிடியாகக் கருதப்படுகிறது.
தனது விலகல் குறித்துப் பேசிய ராகவ் சதா, கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மற்ற தலைவர்கள் எடுக்க அஞ்சிய துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளதாகப் பாராட்டியுள்ளார். 15 ஆண்டுகளாகத் தான் ரத்தம் சிந்தி வளர்த்த ஆம் ஆத்மி கட்சி இப்போது தனது பாதையை இழந்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், பிரதமர் மோடியின் தலைமையில் தேசத்திற்காகப் பணியாற்றப் போவதாகவும், மீண்டும் மக்களிடமே திரும்புவதாகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
