லிப்ரா ப்ரோடுக்ஷன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ரவீந்தர் சந்திரசேகர் நடத்தி வருகிறார். இவர் 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொழிலதிபரான பாலாஜி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். திட கழிவுகளை இயக்க ஆற்றலாக மாற்றும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க போவதாகவும், 200 கோடி ரூபாய் மதிப்புள்ளான அந்த திட்டத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியதாகவும் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் செப்டம்பர் 7-ஆம் தேதி ரவீந்தரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இவரது ஜாமீன் தொடர்பான வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் ரவிந்தர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. பல கட்ட விசாரணைக்கு பிறகு ரவீந்திரைக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஜாமீனில் வெளியே வந்த ரவீந்தர் என் மீது எந்த தப்பும் இல்லை. என் மீது புகார் கொடுத்தவர் பல திருட்டுத்தனம் மற்றும் தவறான தொழில்களை செய்கிறார். அதனை பற்றி தெரிந்து அவரிடமிருந்து விலகினேன். அதற்கு பழிவாங்கும் நோக்கத்தோடு வேண்டுமென்று என் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார். அவங்களை சும்மா விட மாட்டேன். என்னை கைது செய்யும்போது மகாலட்சுமி நீ எப்படி உட்காருவ? எப்படி எந்திரிப்ப? என்று கேட்டார்.
அதனை கேட்டதும் எனது மனம் நொறுங்கிப் போனது. நான் மற்றவர்களை போல கிடையாது. எனது உடல் நலம் பற்றி எனது அம்மாவுக்கு நன்றாக தெரியும். என் உடல் மற்றவர்கள் உடல் போல ஈடு கொடுக்காது என எவ்வளவோ கூறியும் போலீசார் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். என் தாய்க்கு பிறகு மகாலட்சுமி எனக்கு கிடைத்த வரம். யாராலும் என்னையும் மகாலட்சுமியையும் பிரிக்க முடியாது என கூறியுள்ளார்.