தேனி மாவட்டத்தில் கடந்த 2012-13 ஆண்டுகளில், தனியார் நிதி நிறுவனங்கள் அதிக கடன் தருவதாகவும், குறைந்த வட்டி என்றும் கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்து பொதுமக்களிடம் நகைகளை வாங்கின. ஆனால், அந்த நிறுவனங்கள் மக்களின் நகைகளைத் தனியார் வங்கிகளில் மறுஅடகு வைத்துப் பெருமளவு பண மோசடியில் ஈடுபட்டன.
இது தொடர்பாகக் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதில் போடி பகுதியைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் நகையை வைத்த 28 பேர், 12 ஆண்டுகளாகத் தங்கள் நகைகளைத் திரும்பப் பெற முடியாமல் இன்றும் தவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களை வைத்துக் கொண்டு பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. நகையை மீட்பதற்காக ‘நலச் சங்கம்’ அமைத்துப் போராடி வரும் இவர்கள், நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் அலுவலரிடம் கண்ணீருடன் மனு அளித்தனர்.
தனியார் நிறுவனங்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாமல், ரிசர்வ் வங்கி அங்கீகாரம் பெற்ற அரசு வங்கிகளிலேயே நகைகளை அடகு வைக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது. முறையான கடன் தொகையைச் செலுத்திவிட்டுத் தங்களின் வாழ்நாள் சேமிப்பான நகைகளை மீட்டுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.
