நீட் மற்றும் பிற தகுதித்தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய போராட்டம், நாடு முழுவதும் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போராட்டத்தின் தாக்கம் நாடாளுமன்றம் வரை எதிரொலித்ததால், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. கல்வி அமைப்பின் நம்பகத்தன்மை கேள்விக்குறியான சூழலில், மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும் என்ற அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
இதனிடையே, நிலமையை சீர்செய்யும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வாணைய முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்ய ‘விரைவு நீதிமன்றங்கள்’ அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடுபவர்கள் எவரும் தப்ப முடியாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், மாணவர்களின் நலனைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக உறுதியளித்துள்ளார்.
