தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 21 வயது திருமணமான இளம்பெண் ஒருவர், தனியார் கல்லூரியில் பார்மசி படித்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, இவர்களைச் சமாதானம் செய்ய வந்த கோவில் பூசாரி ரகுராம் (28) என்பவர், இளம்பெண்ணிடம் நட்பாகப் பழகியுள்ளார். இந்நிலையில், ஒருமுறை இளம்பெண்ணை காரில் ஏற்றிச் சென்ற ரகுராம், அவருடன் நெருக்கமாக இருப்பது போல புகைப்படங்களை எடுத்து வைத்துக்கொண்டு, அதை வெளியில் சொல்லி விடுவதாக மிரட்டி அப்பெண்ணை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கியுள்ளார்.
மேலும், அந்த இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்த காட்சிகளைத் தனது செல்போனில் மறைமுகமாகப் பதிவுசெய்த ரகுராம், அதனைச் சென்னையில் உள்ள தனது நண்பருக்கு அனுப்பியுள்ளார். அந்த நண்பரும் அந்த வீடியோவைக் காட்டி இளம்பெண்ணை மிரட்டி, வீடியோ காலில் நிர்வாணமாகப் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். பயந்துபோன இளம்பெண் அவர் சொன்னபடியே பேச, அதையும் பதிவுசெய்துகொண்ட அந்த வாலிபர், இளம்பெண்ணைப் பாலியல் இச்சைக்கு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, வீடியோக்களைக் குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவதாகக் கூறித் தொடர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இளம்பெண்ணின் புகாரைத் தொடர்ந்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் அளித்த பூசாரி ரகுராமைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள சென்னையைச் சேர்ந்த வாலிபரைத் தனிப்படை அமைத்துப் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
