‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று காத்திருந்த தேமுதிக தொண்டர்களுக்கு, கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிடவில்லை. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், “உரிய நேரத்தில் கட்சியின் நலன் கருதி நல்ல முடிவு எடுக்கப்படும்” என்று சூசகமாகப் பதிலளித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் பேசிய அவர், “ஒரு அம்மாவாக தேமுதிக-விற்கு என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும்” என்று உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டார். இதன் மூலம், கடந்த காலங்களைப் போலல்லாமல் இந்த முறை கட்சியின் வளர்ச்சிக்கும், தொண்டர்களின் எதிர்காலத்திற்கும் வலுவான அடித்தளம் அமைக்கும் கூட்டணியையே அவர் தேர்ந்தெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேமலதாவின் இந்த நிதானமான நகர்வு, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு அணிகளுமே தேமுதிக-வை நோக்கி காய்நகர்த்த வாய்ப்புள்ளதைக் காட்டுகிறது.
