தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தங்கள் ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளது. இவர்களுக்கு நடுவே மக்களுக்கு புதிய விடியலை தரப்போகிறேன் என்று நடிகர் விஜய் களத்தில் இறங்கியுள்ளார். சமீபத்தில் TVK இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் திமுக தான் தங்களுக்கு ஒரே எதிரி எனவும் விஜய் கூறியிருந்தார். தற்போது முழுமையாக விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறார்.
இந்நிலையில் TVK மாநாட்டில் தொண்டர்களை பவுன்சர்கள் தள்ளி விட்டது எல்லா கட்சியிலும் நடப்பது தான் எனவும் யாரும் திட்டமிட்டு செய்வதில்லை என்றும் விஜய்க்கு ஆதரவாக பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதை தேமுதிக வரவேற்பதாகவும் அதிகாரங்களை பகிர்ந்து அளிக்கும் போது மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற முடியும் என தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் தேமுதிக விஜய் உடன் நெருங்குவதாக பலரும் கூறிவரும் நிலையில் இவர்கள் கூட்டணி குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
