தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து தருமபுரி, நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணி என்றும், தமிழகம் முழுவதும் தங்களுக்குக் கிடைத்துவரும் வரவேற்பு அமோகமாக இருப்பதாகவும் உற்சாகத்துடன் குறிப்பிட்டார்.
விஜயகாந்திற்கும் மறைந்த கருணாநிதி மற்றும் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே 50 ஆண்டுகால நட்பு இருந்ததைச் சுட்டிக்காட்டிய பிரேமலதா, திருமாவளவனும் விஜயகாந்தும் நெருங்கிய நண்பர்கள் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தேமுதிகவுக்கு முழு ஆதரவு அளித்து தேர்தல் பணியில் ஈடுபடும் எனத் தெரிவித்த அவர், தான் போட்டியிடும் விருத்தாசலம் தொகுதியில் திருமாவளவன் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும், விசிக போட்டியிடும் இடங்களில் தான் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் கூறினார்.
தமிழகத்தில் திமுக 7-வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி எனத் தெரிவித்த பிரேமலதா, 234 தொகுதிகளிலும் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் தனது வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவார் என்று கூறிய அவர், “அரிவாளால் நெல் கதிர்களை அறுத்து பானையில் சமைத்து கைகளால் முரசு கொட்டி உதயசூரியனுக்கு பொங்கலை படைப்போம்” எனத் தொண்டர்களிடையே முழங்கினார்.
