நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் வாக்களித்தது குறித்து சட்டசபை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியை வெளியிட்டார். அமைச்சர் மற்றும் வாரியத் தலைவர் பதவிகளுக்கு ஆசைப்பட்டு, அடையாளம் காட்டிய கட்சிக்கே துரோகம் இழைத்துவிட்டு சிலர் த.வெ.க. அரசுக்கு ஆதரவளித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
தூய்மையான ஆட்சி நடத்துவதாகக் கூறும் முதலமைச்சர் விஜய், தற்போது தவறான பாதையில் செல்வது வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டார். பிரிந்து கிடக்கும் ஒரு அணியைச் சந்தித்து ஆதரவு கோரியதுடன், தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இருந்ததால் மட்டுமே இந்த நம்பிக்கைக் கோரும் தீர்மானத்தில் த.வெ.க. வெற்றி பெற்றுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கட்சியின் கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் புகார் அளிக்க உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பதவிக்காகக் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் பாயும் என்பதையும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
