தெலங்கானா மாநிலம் கேரமேரி மண்டலத்திலுள்ள ‘கோலம் கூடா’ என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்த கொடாபா ராமேஸ்வரி என்ற 7 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது. அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாகச் சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், ஆம்புலன்ஸ் வாகனம் கிராமத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.
ஆம்புலன்ஸ் வர முடியாததால், கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மரக்கட்டைகள் மற்றும் துணியால் செய்யப்பட்ட ‘டோலி’ மூலம் அப்ப பெண்ணைச் சுமந்து கொண்டு, வேகமாகப் பாய்ந்த வெள்ள நீரைக் கடந்து சென்றனர். அதன்பின் அவர் கேரமேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் அசைவு இல்லை எனக் கூறி, மேல் சிகிச்சைக்காக ஆசிபாபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் உள்ள மோசமான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதி பற்றாக்குறையை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. மழைக்காலங்களில் இது போன்ற ஆபத்தான பயணங்களைத் தவிர்க்கவும், அவசர காலங்களில் சரியான நேரத்தில் மருத்துவ உதவியைப் பெறவும், தங்கள் பகுதிகளுக்கு அனைத்துக் காலநிலைக்கும் ஏற்ற சாலைகளையும், பாலங்களையும் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
