சுதந்திரதினத்தையொட்டி நேற்று இரவு, திருப்பூர் திருமுருகன் பூண்டி ரிங் ரோடு கே.வி.பி பள்ளி அருகே, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு வந்த ஆட்டோ ஒன்றில், பெண் ஒருவர் கதறி அழுவதை பார்த்து, அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் கோகிலா மற்றும் போலீசார் உடனே ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாரதி என்பவருக்கு, பிரசவ வலி ஏற்பட்டு அவரது கணவர் அவரை அழைத்துக்கொண்டு இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். பாரதிக்கு பாதி குழந்தை வெளியே வந்த நிலையில், மருத்துவமனைக்கு செல்வதற்கு முன், குழந்தை பிறந்த விடும் என்பதால், நர்சிங் படித்திருந்த பெண் போலீஸ் கோகிலா, தைரியமாக ஆட்டோவில் வைத்தே பாரதிக்கு பிரசவம் பார்த்தார். பின் பாரதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்த நிலையில், இவர்கள் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
பாரதிக்கு பிரசவம் பார்த்து, அவரது உயிரை காப்பாற்றிய கோகிலாவை, போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பாக கோகிலா கூறுகையில், நர்சிங் படித்துள்ள நான் மருத்துவமனையில் பணியாற்றி பல பிரசவங்களை பார்த்து உள்ளேன். தமிழக காவல்துறை பணியில், சில மாதங்களுக்கு முன்பு தான் சேர்ந்தேன். ஏற்கனவே பிரசவம் பார்த்த அனுபவம் இருந்ததால், எந்தவித பயமின்றி பாரதிக்கு பிரசவம் பார்த்தேன். பாரதியும் குழந்தையும் நலமாக உள்ளனர், என்றார் கோகிலா.
