பீகார் மாநிலம் சமஸ்திபூரில் வாகனச் சோதனையின் போது போக்குவரத்து காவல்துறையினர் மனிதநேயமற்ற முறையில் நடந்துகொண்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வாலிபர் ஒருவர் தனது கர்ப்பிணி அண்ணியை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றபோது, ஹெல்மெட் அணியாததால் காவல்துறையினர் அவரை மறித்துள்ளனர். அப்போது விதிமுறைப்படி அபராதச் சீட்டு போடுமாறு வாலிபர் கேட்டுக்கொண்டார். ஆனால், காவல்துறையினர் சலான் போடுவதற்குப் பதிலாக, வழக்கை முடிக்க ₹3,500 லஞ்சம் கேட்டு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனை அந்த வாலிபர் எதிர்த்துத் தனது மொபைல் போனில் வீடியோ எடுக்க முயன்றபோது, அங்கு இருந்த பெண் போலீஸார் அவரது போனைப் பறிக்க முயன்றுள்ளனர். இந்த வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளுவின் போது கர்ப்பிணிப் பெண் நடுரோட்டிலேயே மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்களும் உறவினர்களும் உடனடியாக அவரது முகத்தில் தண்ணீரைத் தெளித்து, மயக்கம் தெளிந்ததும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான 3.5 நிமிட வீடியோ இணையத்தில் வைரலாகி, பொதுமக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தவறு செய்த காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இச்சம்பவத்தைக் கண்டித்துள்ள சமஸ்திபூர் எஸ்பி அரவிந்த் பிரதாப் சிங் மற்றும் டிஎஸ்பி ஆசிஷ் ராஜ் ஆகியோர், இது குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். விசாரணை அறிக்கை வந்தவுடன் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்துள்ளனர்
