தமிழகத்தில் தொடரும் மின்தடை… பின்னணியில் சதியா..? தனியார்மயமாக்கத் துடிக்கிறதா அரசு..? எஸ்.எஸ்.சிவசங்கர் பகிரங்கக் குற்றச்சாட்டு..!!

By Soundarya on வைகாசி 23, 2026

Spread the love

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பரவலாக மின் தடை ஏற்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அரசு புதிய காரணங்களைக் கூறித் தப்பிக்க முயலாமல், தடையற்ற மின்சாரம் வழங்க உடனடியாக முன்வர வேண்டும் என்று குன்னம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அரியலூர் மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய மின்சாரத் துறை அமைச்சர், மின் வாரியத்தின் கடன் சுமை மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை குறித்துப் பேசி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், மின் பற்றாக்குறை நிலவுவது உண்மையென்றால், அதுகுறித்து அரசு ஏன் இதுவரை ஆய்வுக் கூட்டங்களை நடத்தித் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். இதே கடன் சுமையையும் பணியாளர்கள் பற்றாக்குறையையும் வைத்துக் கொண்டுதான், கடந்த காலங்களில் திமுக அரசு தமிழகத்தை ‘மின்மிகை மாநிலமாக’ மாற்றிக் காட்டியது என்றும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும், தற்போது நிலவும் மின் தடை விவகாரத்தில் தற்போதைய அரசுக்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதாகச் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மின்சாரத் துறையைத் தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் கொள்கைக்கு வழிவகுக்கவே இந்த அரசு திட்டமிடுகிறதா என்ற பலத்த சந்தேகம் எழுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த காலங்களில் திமுக அரசு இத்தகைய தனியார்மயமாக்கல் கொள்கைக்குத் தொடர்ந்து வலுவான எதிர்ப்பைத் தெரிவித்து வந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.