மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய்க்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்துள்ளார். சினிமாவில் மூன்று மணி நேரம் ஊழல்வாதிகளையும் வில்லன்களையும் வீழ்த்தும் கதாநாயகனாக விஜய்யை மக்கள் ரசித்தனர் என்றும், ஆனால் தற்போது தமிழக மக்கள் அதைவிடப் பெரிய பொறுப்பை (முதலமைச்சர் பதவி) அவரிடம் ஒப்படைத்துள்ளனர் என்றும் மலேசியப் பிரதமர் முன்பு குறிப்பிட்டிருந்ததை இந்த உரையாடலின் போது நினைவு கூர்ந்துள்ளார்.
இந்தத் தொலைபேசி உரையாடலின் போது, 2026ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகத் தாம் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு வரவிருப்பதாக மலேசியப் பிரதமர் தெரிவித்துள்ளார். அப்போது வாய்ப்பு அமைந்தால், தமிழ்நாட்டிற்கும் ஒரு குறுகிய காலப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் முதலமைச்சர் விஜய்யிடம் பகிர்ந்துள்ளார்.
இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துவதைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் பங்கேற்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசவுள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
