மொத்தக் கடன் 20 லட்சம் கோடியா உயரும்.. என்ன பண்றீங்கன்னு பார்க்கத்தான போறோம்.. வெள்ளை அறிக்கை விவகாரத்தில் வெடித்த அரசியல் போர்..!

By Soundarya on ஆனி 17, 2026

Spread the love

தமிழகத்தின் தற்போதைய தவெக அரசு வெளியிட்ட நிதிநிலை வெள்ளை அறிக்கை குறித்து, முன்னாள் நிதியமைச்சரும் திமுக மூத்த தலைவருமான தங்கம் தென்னரசு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தவெக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை நிதிநிலையை விளக்கும் ‘வெள்ளை அறிக்கை’ அல்ல, மாறாக அது ஒரு ‘வெற்று அறிக்கை’ என்று அவர் சாடியுள்ளார். தவெக அரசு தனது நிர்வாகத் திறமையின்மையையும், தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையையும் மூடிமறைக்கவே இந்த நாடகத்தை நடத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாகப் பேசிய தங்கம் தென்னரசு, “நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென்றால் சுமார் ரூ.6 லட்சம் கோடி நிதி தேவைப்படும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அரசு மூலதனச் செலவுகளுக்காக வெறும் ரூ.50,000 கோடியைச் செலவிட்டாலும் கூட, மாநிலத்தின் மொத்தக் கடன் சுமை ரூ.20 லட்சம் கோடியாக உயரும் அபாயம் உள்ளது என்றும் அவர் புள்ளிவிவரங்களுடன் விளக்கியுள்ளார்.

   

“இதை மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்; கடன் சுமை இந்த அளவுக்கு உயரும் போது நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதை நாங்களும் பார்க்கத்தான் போகிறோம்” என்று தவெக அரசுக்கு தங்கம் தென்னரசு சவால் விடுத்துள்ளார். சாத்தியமில்லாத கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, இப்போது மக்கள் கேட்கும் கேள்விகளிலிருந்து தப்பிக்க தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையை ஒரு தற்காப்புப் பாதையாகப் பயன்படுத்துகிறது என்பதே இவரின் முக்கியக் குற்றச்சாட்டாகும்.