சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் அன்புராஜ் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி மாதேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 6-ஆம் தேதி வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் ஆத்தூரில் உள்ள உறவினர்களை பார்க்க அன்புராஜ் சென்றுள்ளார். பின்னர் உறவினர்களை பார்த்துவிட்டு நள்ளிரவு நேரம் வீட்டிற்கு வந்தார்.
காரிப்பட்டி காவல் நிலையத்திற்கு அருகே சென்ற போது பெட்ரோல் தீர்ந்ததால் மோட்டார் சைக்கிள் நின்றது. இதனால் சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு அன்புராஜ் மின்னாம்பள்ளி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வந்து பெட்ரோல் வாங்கிவிட்டு மீண்டும் நடந்து சென்றார்.
அவர் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி அன்புராஜ் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த அன்புராஜ் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அன்புராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுனரான சுரேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
