Fake doctor arrested

பத்திரிகைகளில் வந்த தகவல்களை படித்து நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த போலி மருத்துவர் – சென்னை அண்ணாநகரில் கைது – இவர் ரொம்ப கைராசியான டாக்டராம்!

By Elango on மார்கழி 6, 2025

Spread the love

சென்னை அண்ணா நகரில் 10ம் வகுப்பு பெயியான நபர் ஆயுர்வேத மருத்துவர் என்று கூறி மோசடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா நகர் 2வது மெயின் ரோட்டில் எஸ்ஆர்எஸ் ஆயுர்வேதிக் ஹாஸ்பிடல் என்ற பெயரில் கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பெரம்பூரைச் சேர்ந்த வெங்கடேசன் 42 என்பவர் இந்த ஆயுர்வேத மருத்துவமனையை நடத்தி வந்தார். ஆனால் இவர் முறையாக ஆயுர்வேதம் மருத்துவம் படிக்கவில்லை என மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இயக்கத்துக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் சுகுமாரன் மற்றும் போலீஸ் டிஎஸ்பி சீதாராமன் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். அப்போது வெங்கடேசன் போலி மருத்துவர் என்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து அவரது மருத்துவமனையில் இருந்த ஆயுர்வேத மற்றும் அலோபதி மருந்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

   

10ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத வெங்கடேசன் கடைகளில் விற்கும் ஆயுர்வேத மருத்துவம் சார்ந்த புத்தகங்களை வாங்கி படிப்பாராம். நாளிதழ்கள் வார இதழ்கள் மாத இதழ்களில் வரும் ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளை படித்து அந்தப் பக்கங்களை கட்டிங் செய்து வைத்துக் கொண்டு அதன்படி தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்குவது அவரது வழக்கமாக இருந்துள்ளது. இதற்கு முன்பு வண்ணாரப்பேட்டையில் 15 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வருவதாகவும், கைராசியான மருத்துவர் வெங்கடேசன் என கேட்டால் தெரியாத ஆட்களே இல்லை எனவும் அண்ணா நகர் பகுதியில் பில்டப் செய்துள்ளார்.

   

மேலும் அலோபதி மருத்துவர்களிடம் நோயாளி போல் வெங்கடேசன் சென்று என்னென்ன நோய்களுக்கு என்னென்ன மருந்து மாத்திரைகள் என அவர்கள் எழுதிக் கொடுக்கும் பிரிப்ஸ்கிஷன்களை வைத்துக் கொண்டு அவர் அலோபதி மருத்துவம் செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலி மருத்துவராக செயல்பட்ட வெங்கடேசன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர் வேறு ஏதேனும் மருத்துவமனைகளை நடத்தி இருக்கிறாரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.