தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக டெல்லிக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் விஜய், இன்று டெல்லியில் உள்ள ‘சேவா தீர்த்’ வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். தமிழ்நாட்டில் கடந்த மே 10-ஆம் தேதி புதிய அரசு அமைந்த பிறகு, பிரதமருடன் நடக்கும் முதல் அதிகாரப்பூர்வச் சந்திப்பு இது என்பதால், தேசிய அளவிலும், தமிழக அரசியல் வட்டாரத்திலும் இச்சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், வழக்கமாக மாநில முதல்வர்கள் பிரதமரைச் சந்திக்கும் போது 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஆலோசனைகள் நீடிக்கும் என்ற விதியை உடைத்து, இச்சந்திப்பு மிகக் குறுகிய கால அவகாசத்தில் முடிவடைந்தது அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லியில் உள்ள உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்து, பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திட்டு, பிரதமரின் அறைக்கு நடந்து செல்வதற்கே பொதுவாக 5 முதல் 7 நிமிடங்கள் வரை ஆகிவிடும். அப்படி இருக்கையில், இன்று மாலை 4:27 மணிக்குத் தொடங்கிய இந்த மோடி – விஜய் சந்திப்பு, யாரும் எதிர்பாராத விதமாக 4:37 மணியளவிலேயே, அதாவது வெறும் 10 நிமிடங்களில் நிறைவு பெற்றுள்ளது. இதற்கு முன்பு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரைச் சந்தித்த போது 40 நிமிடங்களும், கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா மற்றும் அஸ்ஸாம் மாநிலத் தலைவர்கள் சந்தித்த போது 30 நிமிடங்களுக்கும் மேலாக ஆலோசனைகள் நீடித்த நிலையில், கொள்கை ரீதியாக எதிரெதிர் துருவங்களாகப் பார்க்கப்படும் மோடி – விஜய் சந்திப்பு இவ்வளவு சுருக்கமாக முடிந்தது ஏன் என்ற விவாதம் டெல்லி வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த 10 நிமிட சர்ப்ரைஸ் சந்திப்பானது பெரும்பாலும் கோப்புகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், புகைப்படங்கள் எடுப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. சந்திப்பு மிகக் குறுகிய நேரமே நீடித்திருந்தாலும், தமிழகத்தின் மிக முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் மாநில நலன் சார்ந்த விரிவான கோரிக்கை மனுவை முதலமைச்சர் விஜய் பிரதமரிடம் முறைப்படி சமர்ப்பித்துள்ளார். இந்த மனுவில் இடம்பெற்றுள்ள விபரங்கள் மற்றும் எத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள், முதலமைச்சர் அலுவலகம் (CMO) அல்லது பிரதமர் அலுவலகம் (PMO) வெளியிடும் அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கைக்குப் பிறகே முழுமையாகத் தெரியவரும்.
பிரதமரைச் சந்தித்து முடித்த கையோடு முதலமைச்சர் விஜய், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்குத் திரும்பிய போது, அங்கு காத்திருந்த செய்தியாளர்கள் சந்திப்பு குறித்துப் பல கேள்விகளை எழுப்பினர். ஆனால், முகத்தில் புன்னகை ஏதுமின்றி, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் விஜய் வணக்கம் மட்டும் வைத்துவிட்டு உள்ளே சடசடவென நடந்து சென்றார். மேலும், இந்த முக்கியமான சந்திப்புக்கு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுவதற்கோ அல்லது பேட்டி அளிப்பதற்கோ அங்கு மைக், போடியம் போன்ற எந்தவொரு சிறப்பு ஏற்பாடுகளும் முன்கூட்டியே செய்யப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள சூழலில், சட்டப்பேரவைக்…
விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், பல்வேறு சென்சார் சிக்கல்கள் மற்றும் தடைகளைக்…
கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள முதல்வர் விஜய்க்குப் போதிய விவரம் இல்லை என்று…
தமிழகத்தில் அரசியல் சூழல் பரபரப்படைந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள…
தூத்துக்குடியில் கைதாகி மரணமடைந்த அருணாச்சலம் என்ற கைதியின் உயிரிழப்பு குறித்து, காவல்துறையினரால் தாக்கப்பட்டதாலேயே அவர் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் மற்றும்…
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம், பத்லாபூர் சிர்காவ் பகுதியில் வசித்து வந்தவர் ஹரி ராம் சிங் (35). இவரது மனைவி…