தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். தனது உரையை “பாரத் மாதே கி ஜே” மற்றும் “தமிழக சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்” என தமிழில் தொடங்கி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். இந்த மேடையில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, திமுக அரசுக்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மதுராந்தகத்தில் கூடியுள்ள கடல் போன்ற மக்கள் கூட்டமே தமிழகம் ஒரு பெரிய ஆட்சி மாற்றத்திற்குத் தயாராகிவிட்டதைக் காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார். திமுகவின் “மோசமான ஆட்சியில்” இருந்து விடுபட மக்கள் துடித்துக் கொண்டிருப்பதாகவும், தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் திமுக ஆட்சி முடிவுக்கு வருவதற்கான சான்றாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், திமுக ஆட்சியின் முடிவிற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டதாகச் சூளுரைத்த பிரதமர், தமிழக மக்கள் ஊழலற்ற மற்றும் வளர்ச்சி சார்ந்த ஆட்சியை விரும்புவதாகக் கூறினார். அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது திமுகவை வீழ்த்துவதற்கான பலத்தை அளிப்பதாக அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். வரவிருக்கும் தேர்தல் தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதைத் தனது பேச்சின் மூலம் மோடி உறுதிப்படத் தெரிவித்தார்.
