செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்றனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கைகோர்த்துள்ள நிலையில், இக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த மேடையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாகக் காட்சியளித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சித் தலைவர்களின் பெயர்களை வரிசையாகக் குறிப்பிடும்போது ஒரு சுவாரசியமான நிகழ்வு அரங்கேறியது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் பெயரைக் குறிப்பிடும்போது, “அன்புமணி ரா…” என்று தொடங்கிவிட்டு, சட்டென ஒரு விநாடி நிறுத்தி ‘ராமதாஸ்’ என்ற குடும்பப் பெயரைத் தவிர்த்தார். சமீபகாலமாக அன்புமணி தனது பெயருடன் ராமதாஸ் என்ற பெயரைப் பயன்படுத்துவதற்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பில் இருந்து சில அதிருப்திகள் நிலவி வருவதாகக் கூறப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மிகவும் கவனமாகச் செயல்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கூட்டணித் தலைவர்களின் மனதை புண்படுத்தக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட இந்த நுணுக்கமான அணுகுமுறை, மேடையில் இருந்தவர்களிடையே பேசுபொருளானது. அவரைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடியும், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டதாகக் கூறி, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஊழலற்ற ஆட்சியை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தேர்தல் இது என்று எடப்பாடி பழனிசாமி முழங்கியதுடன், அதிமுக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
