விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, பண்ருட்டி அருகே உள்ள நெல்லிக்குப்பத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். அப்போது, அதே பள்ளியில் படிக்கும் சக மாணவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். பாட்டி வேலைக்குச் செல்லும் நேரங்களில் மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது, அந்த மாணவர் அங்கு வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில், மாணவிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி 7 மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில், பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த மாணவர் தலைமறைவானதால், அவரைப் பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், கர்ப்பிணியாக இருக்கும் மாணவிக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு, மருத்துவர்கள் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
