தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் அமைந்துள்ள அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு பயிற்சி பெறும் மாணவர்களுக்காக ஒரு விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகின்றது. இந்த விடுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கி விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு அருகில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி பயின்று வருகிறார்கள். இந்நிலையில் அந்த விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவனை அதே விடுதியில் தங்கி இருந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர், 10, 9 ஆம் வகுப்பு மாணவர்கள் என மொத்தம் நான்கு பேர் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து பல்வேறு வகைகளில் துன்புறுத்தி வந்துள்ளனர்.
மேலும் மாணவனை சிகரெட் புகைக்க கட்டாயப்படுத்தியும் கடுமையாக அச்சுறுத்தியும் அவர்கள் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்தக் கொடுமை நாளுக்கு நாள் தீவிரம் அடைந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த சிறுவன் இறுதியில் தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளான். இதனைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோர் தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேலியன் என்பவரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நான்கு மாணவர்களும் உடனடியாக விடுதியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 4 மாணவர்களையும் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் புகாரில் கூறப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் உண்மை என உறுதி செய்யப்பட்டது. தற்போது நான்கு மாணவர்கள் மீதும் போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
