தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைந்து வந்த நிலையில் விடுபட்ட பெண்களுக்கு மீண்டும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக விடுபட்ட பெண்கள் அனைவரும் மீண்டும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து வந்தனர்.
அவர்களில் தகுதியானவர்களுக்கு கடந்த டிசம்பர் 12ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 12ஆம் தேதி வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சியில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் விரிவாக்கத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 17 லட்சம் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே பயன் பெற்று வரும் 1.13 கோடி பயனாளிகளின் வங்கி கணக்கில் 27-வது தவணை ஆயிரம் ரூபாய் டிசம்பர் 15ஆம் தேதியான இன்று வரவு வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
