மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் ஹார்முஸ் வழித்தட நெருக்கடி காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 88 சதவீதத்தை இறக்குமதி செய்யும் இந்தியாவிற்கு, இந்த விலை உயர்வு பொருளாதார ரீதியாகப் பெரும் சவாலாக மாறியுள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலரை நெருங்கியுள்ள சூழலில், இது நாட்டின் இறக்குமதி செலவை அதிகரிப்பதோடு, நடப்பு கணக்குப் பற்றாக்குறையையும் 20 பில்லியன் டாலர் என்ற அபாய அளவை நோக்கித் தள்ளியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அரசு உயர்த்தவில்லை. இது சாமானியர்களுக்குச் சாதகமாகத் தெரிந்தாலும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான IOCL, BPCL மற்றும் HPCL ஆகியவற்றுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலில் 18 ரூபாயும், டீசலில் 35 ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதால், இந்த நிறுவனங்களின் தினசரி இழப்பு சுமார் 1,600 கோடி ரூபாயாக உள்ளது. மத்திய அரசு எக்சைஸ் வரியைச் சற்றே குறைத்திருந்தாலும், அந்தப் பலன் நுகர்வோருக்குச் செல்லாமல் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவே பயன்படுத்தப்படுகிறது.
மத்திய அரசைப் பொறுத்தவரை எரிபொருள் வரி என்பது மொத்த வருவாயில் 8 சதவீத பங்களிப்பை அளிக்கும் முக்கிய ஆதாரமாகும். வரியை முழுமையாகக் குறைத்தால் சுமார் 36 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டு நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும்; அதேசமயம் விலையை உயர்த்தினால் பணவீக்கம் உயர்ந்து பொதுமக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். இந்த இருமுனை நெருக்கடிக்கு இடையே, தேர்தல் அரசியல் ஒரு முக்கியத் தடையாக உள்ளது. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடப்பதால், அரசியல் காரணங்களுக்காக விலை உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில், தேர்தல் காலம் முடியும் வரை அரசு விலையை உயர்த்தாமல் தள்ளிப்போட வாய்ப்புள்ளது. இருப்பினும், எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் கட்டுக்கடங்காமல் போவதால், தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் அதிரடி உயர்வு இருக்கலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் மட்டுமே இந்தியப் பொருளாதாரம் மற்றும் சாமானிய மக்கள் இந்த விலையேற்ற பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும் என்பதே தற்போதைய எதார்த்தமான நிலையாகும்.
