உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், காலி சிலிண்டர்களுடன் பொதுமக்கள் மாரத்தான் வீரர்களைப் போல முண்டியடித்து ஓடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சிலிண்டர் விலை கணிசமாக உயரப்போவதாகப் பரவிய ஒற்றை வதந்தி, நள்ளிரவு முதலே இல்லத்தரசிகளின் தூக்கத்தைக் கெடுத்ததுடன், விடியற்காலை 4 மணி முதலே எரிவாயு ஏஜென்சி வாசலில் மக்களைத் திரளச் செய்தது.
காலை 7 மணிக்கு ஏஜென்சி திறக்கப்பட்டதும், வரிசை முறையெல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டு, மக்கள் ஒருவரையொருவர் முட்டிக்கொண்டு உள்ளே பாய்ந்தனர். முதியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் தங்கள் தோள்களிலும் தலையிலும் கனமான காலி சிலிண்டர்களைச் சுமந்து கொண்டு, விலை உயர்விலிருந்து தப்பிக்கப் போட்டி போட்டுக்கொண்டு ஓடியது அப்பகுதியே போர்க்களம் போலக் காட்சியளிக்கக் காரணமானது.
சமூக வலைதளங்களில் பரவிய இந்தத் தவறானத் தகவலால் ஏற்பட்ட தேவையற்ற பதற்றமே இந்தக் குழப்பத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. விலை உயர்வு குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியாகாத நிலையில், “இன்று வாங்காவிட்டால் நாளை விலை கூடிவிடும்” என்ற அச்சத்தில் மக்கள் எடுத்த இந்த அவசர முடிவு, வதந்திகள் எவ்வளவு வேகமாகச் சாதாரண மக்களின் பைகளைத் தாக்குகின்றன என்பதற்குச் சான்றாக அமைந்தது.
