சென்னை இப்ராஹிம் சாகிப் தெரு அருகே, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அந்த வழியாகச் சென்ற இளம்பெண்களிடம் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆபாசமான முறையில் அநாகரிகமாக நடந்துகொண்டார். கடந்த சில நாட்களாகவே அந்த நபர் தொடர்ச்சியாக இது போன்ற அருவருப்பான செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் சத்தம் போடவே, அங்கு திரண்ட பொதுமக்களும் தூய்மைப் பணியாளர்களும் அந்த முதியவரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். முதியவரைப் பொதுமக்கள் பிடித்துக் கட்டையாலும் கைகளாலும் தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையடுத்து, அவர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் தூய்மைப் பணியாளர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடங்களில் பெண்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த அந்த நபரின் அடையாளம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதுடன், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
