தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளது உறுதியாகியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது பாணியில் கவித்துவமாக வாழ்த்துத் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்.
பார்த்திபன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “வாய் வழி காற்றை ஊதி, மெழுகுவர்த்தியின் சுடர் அணைத்து, ‘happy birthday’ சொல்வதைப்போல, விசில் ஊதி சூரியனையே அணைத்து புதிய அரசு விடிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் திமுகவின் ‘சூரியன்’ சின்னத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு, ஒரு பெரும் அரசியல் மாற்றத்தை விஜய் நிகழ்த்தியிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தனது வாழ்த்துச் செய்தியில், “விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், ஜெயம் விஜய் அவர்களால் மட்டுமே அசுர பலத்தோடு நிகழ்த்த முடியும்” என விஜய்யின் அரசியல் வருகையையும் அவரது வெற்றியையும் பாராட்டியுள்ளார். விஜய்யின் இந்த ‘அசுர பலம்’ பொருந்திய வெற்றி தமிழக அரசியலில் ஒரு புதிய விடியலை ஏற்படுத்தும் எனத் திரைத்துறை வட்டாரங்கள் மட்டுமன்றி பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
