பீகாரைச் சேர்ந்த தம்பதியினர் வேலை தேடி குஜராத்தின் முண்ட்ரா பகுதிக்கு வந்து தங்களது 14 மற்றும் 11 வயதுடைய இரு மகன்களுடன் வசித்து வந்தனர். கடந்த ஜனவரி 15 அன்று விளையாடச் சென்ற இரு சிறுவர்களும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அக்கம் பக்கத்திலும், உறவினர்களிடமும் தேடியும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் நம்பிக்கையை இழக்காத பெற்றோர், தங்கள் குழந்தைகள் பிச்சை எடுக்கும் கும்பலிடம் சிக்கியிருக்கலாம் எனச் சந்தேகப்பட்டனர்.
பிள்ளைகளைக் கண்டுபிடிக்கத் தங்களது வேலை, வாழ்வாதாரம் என அனைத்தையும் துறந்த அப்பெற்றோர், பிச்சைக்காரர்களைப் போல வேடமணிந்துகொண்டனர். தெருத்தெருவாக அலைந்து திரிந்து குஜராத், மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் எனப் பல மாநிலங்களில் தீவிரமாகத் தேடினர். பல மாத போராட்டத்திற்குப் பிறகு, மூத்த மகன் பிச்சைக்கார கும்பலுடன் இருப்பதாக வந்த தகவலை வைத்து, ராஜஸ்தானின் பிகானேர் பகுதியில் அவனைக் கண்டுபிடித்தனர்.
இருப்பினும் இளைய மகனுக்கான தேடல் தொடர்ந்தது. அடுத்த 15 நாட்களில், மேற்கு வங்கத்தின் ஹவுரா பகுதியில் இளைய மகனும் பாதுகாப்பாக மீட்கப்பட்டான். தங்கள் பிள்ளைகளை மீண்டும் பெற அடையாளம், வசதி, வாழ்க்கை என அனைத்தையும் பணையம் வைத்த அந்தப் பெற்றோரின் கண்ணீர் நிறைந்த போராட்டம், பெற்றோருக்குத் தங்கள் பிள்ளைகளே உலகம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
