பிகார் மாநிலம் மதுபானியைச் சேர்ந்த ராகேஷ் குமார் (11) என்ற சிறுவன், பைக் விபத்தில் பலத்த காயமடைந்து அங்குள்ள சர்தார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அந்தச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மருத்துவர்களின் அலட்சியமே சிறுவனின் மரணத்திற்கு காரணம் எனக் கூறி மருத்துவமனை வளாகத்தை அடித்து நொறுக்கி, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.
சிறுவனின் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாகவும், நுரையீரலில் நீர் கோர்த்ததால் ஏற்பட்ட சிக்கலே உயிரிழப்பிற்குக் காரணம் என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தியமான அனைத்து சிகிச்சைகளையும் அளித்த போதிலும் சிறுவனைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதாக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
