“தமிழக அரசு இன்னும் கடிதமே அனுப்பல”… பரந்தூர் ஏர்போர்ட் கதையில் அடுத்த திருப்பம்….. வெளிவந்த ஷாக்கிங் ரிப்போர்ட்….!

By Nanthini on ஆவணி 6, 2026

Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய பன்னாட்டு கிரீன்ஃபீல்ட் விமான நிலையத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு அளித்துள்ள விளக்கம் பெரும் அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவதாகவோ, வேறு இடத்திற்கு மாற்றுவதாகவோ அல்லது திரும்பப் பெறுவதாகவோ தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான முன்மொழிவோ அல்லது கடிதமோ வரவில்லை என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இத்திட்டத்துக்காகத் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு ஏற்கனவே கொள்கை அளவிலான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு திட்டத்தின் தற்போதைய நகர்வுகள் குறித்தான பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சுமார் 4,970 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 13-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் இந்த பிரம்மாண்ட விமான நிலையத்தை அமைக்க ஆரம்பக்கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், இத்திட்டத்திற்காக வளமான விளைநிலங்களும் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப்படுவதாகக் கூறி, ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர்ந்து தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். விவசாய நிலங்களையும் இயற்கை நீர்நிலைகளையும் அழித்து விமான நிலையம் அமைக்கக் கூடாது என்றும், இத்திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் உள்ளூர் மக்களும் பல்வேறு அமைப்பினரும் தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.

   

இதனிடையே, நீர்நிலைகள் மற்றும் விளைநிலங்களைப் பாதுகாக்கும் நோக்கில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், நில எடுப்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டு மாற்று இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், பொதுவெளியிலும் அரசியல் மேடைகளிலும் இத்திட்டம் கைவிடப்படுவதாகப் பேச்சுகள் அடிபட்டபோதிலும், மத்திய அரசிடம் இது தொடர்பாக மாநில அரசு சார்பில் எந்தவொரு முறையான கோரிக்கையோ அல்லது அதிகாரப்பூர்வ அரசாணையோ சமர்ப்பிக்கப்படவில்லை என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

   

மாநில அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் பரந்தூர் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடோ அல்லது திட்ட காலவரையறையோ இடம்பெறாத நிலையில், மத்திய அரசின் இந்த விளக்கம் திட்டத்தின் எதிர்காலம் குறித்த குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. நில கையகப்படுத்துதல் மற்றும் மாற்று இடத்தை தேர்வு செய்தல் ஆகியவை மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டவை என்பதால், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கொள்கை முடிவுகளில் மாற்றம் செய்ய மாநில அரசு முறைப்படி கடிதம் எழுத வேண்டியது அவசியமாகும். எனவே, பரந்தூரிலேயே திட்டம் தொடருமா அல்லது மாற்று இடம் தேர்வு செய்யப்படுமா என்பதில் மாநில அரசு விரைந்து தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும் என்று தொழில் அமைப்பினரும் உள்ளூர் விவசாயிகளும் எதிர்பார்க்கின்றனர்.