“இனி பழனி போனா கியூல நிக்கவே வேண்டாம்”…. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு…. ஆன்லைனில் வந்த செம அப்டேட்…..!

By Nanthini on ஆடி 6, 2026

Spread the love

உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குத் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இத்தகைய சூழலில், பக்தர்களின் வசதியை மேம்படுத்தவும், நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு டிஜிட்டல் சேவைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதன் முக்கியப் பகுதியாக, பழனி மலைக்கோயிலுக்குச் செல்வதற்கான ரோப்கார் ஆன்லைன் முன்பதிவுச் சேவை தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இப்புதிய திட்டத்தின்படி, பக்தர்கள் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தங்களுக்கு உகந்த நேரத்தைத் தேர்வு செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்குச் சென்று வர ஒரு நபருக்கு 100 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த ஆன்லைன் முன்பதிவு மூலம் நாள்தோறும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 50 பேரும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை 50 பேரும் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இச்சேவை இன்று (திங்கட்கிழமை) முதல் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வந்துள்ளதால், இடைத்தரகர்களின் தொல்லை குறைவதோடு பக்தர்களின் நேர விரயமும் பெருமளவில் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பழனி கோயிலில் ஆய்வு மேற்கொண்டபோது, பக்தர்கள் தெரிவித்த புகார்களின் அடிப்படையில் இம்முடிவு விரைந்து எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மின்இழுவை ரயில் (வின்ச்) மற்றும் கால பூஜைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு வசதி சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக கோயிலுக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளையும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி மிக விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாகக் கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் இந்த டிஜிட்டல் தொழில்நுட்ப முயற்சிகள் பழனிக்கு வரும் ஆன்மிக அன்பர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளன.