பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 30 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், வெறும் 2 கோடி ரூபாய்க்குத் தனிநபர்களுக்கு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1888-ஆம் ஆண்டு குப்புசாமி மணியக்காரர் என்பவரால் கோயிலின் திருப்பணிகளுக்காகவும், பக்தர்களின் பயன்பாட்டிற்காகவும் 1.40 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த நிலத்தை எக்காரணம் கொண்டும் விற்கவோ, கைமாற்றவோ கூடாது என்று தானப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி இந்த நில மோசடி அரங்கேறியுள்ளது.
பக்தர்களின் வாகன நிறுத்தத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நிலம், கடந்த 60 ஆண்டுகால ஆக்கிரமிப்பிலிருந்து அண்மையில்தான் இந்து சமய அறநிலையத்துறையால் மீட்கப்பட்டது. இந்த நிலத்தை எவ்விதப் பத்திரப்பதிவும் செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதோடு, பதிவுத்துறைக்கும் அறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. இத்தகையச் சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகிய தனிநபர்களின் பெயருக்கு இந்த நிலம் சட்டத்திற்குப் புறம்பாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது கோயில் நிர்வாகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பத்திரப்பதிவு நடந்த நாளன்று பழனி பதிவாளர் விடுப்பில் சென்றிருந்த நிலையில், கொடைக்கானல் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளார். அவர் பொறுப்பில் இருந்த அந்த ஒரே நாளில், அறநிலையத்துறையின் எச்சரிக்கைக் கடிதங்களையும் மீறி இந்த மோசடிப் பதிவு அரங்கேறியுள்ளது. இதையடுத்து, தற்காலிகப் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற திருப்புகழ், வாங்கிய நபர்கள் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் சசிகலாவும் சஸ்பெண்ட் (பணி இடைநீக்கம்) செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலத்தின் உண்மையான மதிப்பு 30 கோடி ரூபாய் எனப் போலீசார் தரப்பில் கூறப்பட்டாலும், இதன் சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய் வரை இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், மாற்று அதிகாரி மூலமாகவே இந்தத் தவறு நடந்துள்ளதாகவும், இதில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தன் மீதான புகார்கள் ஆதாரமற்றவை என்றும் அவர் மறுத்துள்ளார். இத்தகைய சூழலில், வெறுமனே சஸ்பெண்ட் நடவடிக்கையோடு நிறுத்தாமல், கோயில் நிலத்தைக் கொள்ளையடித்தவர்கள் மீது நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆன்மீகப் பெருமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆக்ரா எக்தா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், 17 வயதுடைய இளம்பெண் ஒருவர் நேற்று மாலை 6:30…
கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் ஆன்லைன் டெலிவரி செயலியான 'பிலிங்கிட்' மூலம் வாடிக்கையாளர் ஒருவர் முட்டை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி…
மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கையால், மும்பை வீதியோர உணவகங்களில் பெரும் மாற்றம்…
தன் காதலனுடன் ரெஸ்டாரண்ட், ஹோட்டல் மற்றும் மால் போன்ற இடங்களுக்குச் சென்று சுற்றிப்பார்க்கக் கையில் பணமில்லாமல் தவித்த இளம்பெண் ஒருவர்,…
இளம் ஜோடியினர் ஒடிசாவிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெத்தபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த…
நேபாள நாட்டில் வரலாறு காணாத பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு ஒட்டுமொத்த தேசமே பெரும் துயரத்திலும் பேரழிவிலும் மூழ்கியுள்ளது. ஆயிரக்கணக்கான…