ஈரான் போரின் தாக்கம் உலக நாடுகளை உலுக்கி வரும் நிலையில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள பாகிஸ்தான் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. எரிசக்தி செலவுகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதால், நிலைமையைச் சமாளிக்க அந்நாட்டு அரசு தினமும் இரண்டு மணி நேரத் திட்டமிட்ட மின்வெட்டை அறிவித்துள்ளது. ஏற்கனவே பலவீனமான பொருளாதாரச் சூழலில் தத்தளிக்கும் பாகிஸ்தானுக்கு, சர்வதேசப் போர்ச் சூழல் கூடுதல் சுமையாக மாறியுள்ளது நெட்டிசன்கள் மத்தியில் விவாதப் பொருளாகியுள்ளது.
இந்த மின்வெட்டுத் திட்டம் குறிப்பாக மின் நுகர்வு அதிகமாக இருக்கும் மாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை அமல்படுத்தப்பட உள்ளது. நீர்மின் உற்பத்தி சரிந்துள்ள நிலையில், ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளதே இந்தத் தீவிர முடிவுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. பாகிஸ்தானின் கிராமப்புறங்களில் ஏற்கனவே அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் இருக்கும் நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக ‘டைம் பிக்ஸ்’ செய்து மின்சாரத்தை நிறுத்துவது அந்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து விமர்சனங்கள் அனல் பறக்கின்றன. குறிப்பாக, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் மல்லுக்கட்டத் துடிக்கும் பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையை இந்திய நெட்டிசன்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர். “சொந்த நாட்டில் அடிப்படைத் தேவையான மின்சாரத்தைக் கூட வழங்க முடியாத நிலையில், இன்னும் காஷ்மீர் கனவு எதற்கு?” என்றும், “உங்க ஊருலேயே நெருக்கடியைச் சமாளிக்க முடியல.. இதுல காஷ்மீர் கேக்குதா?” என்றும் கிண்டலான பதிவுகள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
எரிசக்தி கட்டணங்களைச் செலுத்த முடியாமல் திணறும் பாகிஸ்தான், சில நகரங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்துவிட்டு மற்ற பகுதிகளில் மின்வெட்டை அமல்படுத்துவது பாரபட்சமானது என்ற கருத்தும் எழுந்துள்ளது. பொருளாதார நெருக்கடியும், போர்க்கால சூழலும் ஒரு சேர அழுத்துவதால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போயுள்ளது. எல்லைப் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதை விடுத்து, நாட்டின் உட்கட்டமைப்பையும் பொருளாதாரத்தையும் சீரமைப்பதில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும் என்பதே தற்போதைய பொதுவான விமர்சனமாக இருக்கிறது.
