“ஒரே ஒரு ரூபாய்.. 50 வருஷ அரசியல்”… “லஞ்சம் வாங்கினேன்னு நிரூபிச்சா இங்கேயே செத்துருவேன்”… காட்பாடியில் கதறிய துரைமுருகன்…!

By Nanthini on சித்திரை 16, 2026

Spread the love

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான துரைமுருகன், இன்று கிளித்தான்பட்டறை பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்குப் பொதுமக்கள் சார்பில் சிலம்பாட்டம், சுருள்வாள் வீச்சு, மேளதாளங்கள் மற்றும் பொம்மை நடனங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப் பரப்புரையின் போது உணர்ச்சிவசப்பட்ட துரைமுருகன், தனது அரசியல் பயணத்தில் நேர்மையையும் ஒழுக்கத்தையும் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை எனச் சூளுரைத்தார்.

மேடையில் பேசிய அவர், “கடந்த 40 முதல் 50 ஆண்டுகால எனது அரசியல் வாழ்க்கையில், யாரிடமாவது ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கினேன் என்று யாராவது நிரூபித்தால், இங்கேயே நெருப்பில் குதித்து உயிரை விடுவேன்” என்று சவால் விடுத்தார். மேலும், பெண்கள் விஷயத்தில் தான் ஒருபோதும் தவறாக நடந்துகொண்டதில்லை என்றும், அப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்தால் தான் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொள்ளத் தயார் என்றும் உருக்கமாகத் தெரிவித்தார். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மக்களிடம் பயமும், ஒழுக்கமும் மிக அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

   

தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பேசிய துரைமுருகன், தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் விரிவுபடுத்தப்படும் என்று உறுதி அளித்தார். குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், குடும்பப் பயன்பாட்டுக்காக 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும் என்றும், அதனைக் கொண்டு மின்சாதன அடுப்புகளை மக்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.

   

தொகுதி மேம்பாடு குறித்துப் பேசுகையில், திருவள்ளுவர் நகரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டதாகவும், தேர்தல் முடிந்தவுடன் அது மக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்படும் என்றும் கூறினார். “மக்களுக்குப் பயந்து தொண்டு செய்தால் மட்டுமே அவர்கள் நம்மை வாழ்த்துவார்கள்” என்று குறிப்பிட்ட அவர், இத்தனை ஆண்டுகள் தான் செய்த பணிகளுக்காக மீண்டும் தனக்கு ‘உதயசூரியன்’ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.