தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறது. பாஜகவுடன் இ பி எஸ் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதன் வெளிப்பாடாக சமீபத்தில் செங்கோட்டையன் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க இபிஎஸ்-க்கு கெடு விதித்திருந்தார். ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒன்றிணைய உள்ளதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றால் பிரிந்து இருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் செங்கோட்டையன் உடன் தொடர்ந்து பேசி வருவதாக முதல் முறையாக உண்மையை பொதுவெளியில் போட்டு உடைத்துள்ள ஓபிஎஸ், அடுத்த வாரம் நேரில் சந்தித்து பேச உள்ளதாகவும் கூறியுள்ளார். இருவரும் தற்போது அரசியல் ரீதியாக இணைந்துள்ளதால் அதிமுகவில் அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
