தமிழ்நாட்டின் கடன் சுமை குறித்த வெள்ளை அறிக்கையை மாநில நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டதைத் தொடர்ந்து, கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பழைய அறிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போதைய வெள்ளை அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் மொத்த கடன் சுமை ₹10 லட்சம் கோடியைக் கடந்துள்ளதோடு, பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்தால் அது ₹13.18 லட்சம் கோடியைத் தாண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மீதும் தற்போது சுமார் ₹1.29 லட்சம் கடன் சுமை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் அரசியல் விவாதம் எழுந்துள்ளது.
இந்தச் சூழலில், கடந்த 2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் இடைக்கால பட்ஜெட்டின் போது மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வைரலாகி நெட்டிசன்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. அன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக அரசு 10 ஆண்டு காலத்தில் தமிழக மக்கள் தலையில் ₹5.70 லட்சம் கோடி கடனைச் சுமத்திவிட்டுச் செல்வதாகவும், அமைச்சர்கள் “கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்” என வாரிச் சுருட்டியதாகவும் ஆவேசமாகக் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், 2006-11 திமுக ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்ட கடன் வெறும் ₹44,084 கோடி மட்டுமே என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
தற்போது வெளியாகியுள்ள வெள்ளை அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கூடுதலாக ₹4.96 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டு, மொத்த கடன் ₹10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது தெரியவந்துள்ளது. இதனைச் சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள் மற்றும் தவெக போன்ற எதிர்க்கட்சியினர், “அதிமுகவின் 10 ஆண்டு கால கடனை விமர்சித்த திமுக, வெறும் 5 ஆண்டுகளில் ₹4.96 லட்சம் கோடி கூடுதல் கடனை ஏற்றியது ஏன்?” என்றும், “திமுக ஆட்சியில் மூலதனச் செலவை விட வட்டிக்குத்தான் அதிகம் செலவாகிறது” என்றும் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.
