“அவள் மீது எனக்கு சந்தேகம்”…. லிவ்-இன் காதலியை சமையலறை கத்தியால் துடிக்க துடிக்க கொன்ற காதலன்… பெங்களூருவில் நள்ளிரவில் நடந்த பயங்கர…!

By Nanthini on ஆனி 19, 2026

Spread the love

பெங்களூருவில் லிவ்-இன் உறவில் இருந்த சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், அவரது காதலனாலேயே கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் சிக்கிமைச் சேர்ந்த அதி ஹங்மா சுப்பா (22) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் (Salooon) வரவேற்பாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த கொடூரக் கொலையைச் செய்ததாக மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கைச் சேர்ந்த அவரது காதலன் பூர்பா லெப்சா என்பவரை பெல்லந்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அதி ஹங்மா சுப்பாவும் பூர்பா லெப்சாவும் கடந்த சில காலமாக காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்புதான் இருவரும் வேலை தேடி பெங்களூருவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். அங்குள்ள தொட்டகன்னஹள்ளி பகுதியில் ஒரு வாடகை வீட்டை எடுத்து, இருவரும் ஒன்றாக வசித்து (Live-in relationship) வந்துள்ளனர். பூர்பா லெப்சா அங்குள்ள ஒரு ஹோட்டலில் உணவு பரிமாறுபவராக (Waiter) வேலை பார்த்து வந்துள்ளார்.

   

இந்நிலையில், தனது காதலிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருப்பதாக பூர்பா லெப்சா சந்தேகமடைந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இருவருக்கும் இடையே வீட்டில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பூர்பா லெப்சா, சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து அதி ஹங்மாவின் கழுத்தில் கொடூரமாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்த இளம்பெண் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

   

அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பெல்லந்தூர் போலீசார், பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். காதலியைத் தீர்த்துக்கட்டிய பூர்பா லெப்சாவை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்தால் ஏற்பட்ட இந்த கொடூரக் கொலை சம்பவம் பெங்களூருவில் வாழும் பிற மாநில இளைஞர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.