தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் NDA கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், ஜே சி டி பிரபாகர் என்னை விட்டு வெகுதூரம் சென்று பல மாதங்கள் மற்றும் வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் என்னுடன் தொடர்பில் தான் இருக்கின்றார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் மீண்டும் வெற்றி பெற முடியும் என்ற சூழல் உள்ளது.
பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதை சாத்தியப்படுத்த வேண்டும் என்பதே ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. செங்கோட்டையனுக்கு முன்பாகவே அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் எல்லாம் ஒன்றிணைைய வேண்டும் என்று குரல் கொடுத்தவன் நான் தான். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்திற்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக வெளியான தகவல் தவறானது. இது குறித்து கடந்த வாரம் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தவறான தகவல் என பிரகடனப்படுத்தியுள்ளோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியே வந்து விட்டோம். திமுக கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் இணைய உள்ளதாக வெளியாகும் தகவலும் தவறானது. எம்ஜிஆர் வகுத்து ஜெயலலிதா அவர்களால் பின்பற்றப்பட்ட அதிமுக சட்டவிதி இன்று மாற்றப்பட்டுள்ளது. அதனை மீண்டும் மாற்றி அமைக்க வேண்டும் என்ற எங்களின் சட்டப் போராட்டம் தொடர்கின்றது. இரட்டை இலை உட்பட ஆறு வழக்குகள் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தொண்டர்களின் எண்ணப்படி நல்ல தீர்ப்பு கிடைக்கும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
