தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, அதிமுக உட்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற மொத்தமுள்ள 47 அதிமுக எம்.எல்.ஏ-க்களில், 17 பேர் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்த 17 எம்.எல்.ஏ-க்களும் இன்று சட்டப்பேரவை செயலாளர் மற்றும் தற்காலிக சபாநாயகரை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து மனு அளித்துள்ளனர்.
அதேசமயம், மீதமுள்ள 30 எம்.எல்.ஏ-க்கள் எஸ்.பி. வேலுமணியை அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் திரும்பியுள்ள நிலையில், இபிஎஸ் தரப்பு தங்களது ஆதரவை உறுதிப்படுத்தத் தீவிரமாக மனு அளித்துள்ளது. சட்டப்பேரவை கூடும் முதல் நாளிலேயே அதிமுக அதிகாரப்பூர்வமாக இரண்டு அணிகளாகப் பிரிந்து நிற்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
