அரசாங்கத்தின் அலட்சியத்திற்கு பலியான உயிர்… நெல் மூட்டைகளுக்கு நடுவே சிக்கி மூச்சுத்திணறி இறந்த பெண்… தஞ்சை நெல் கிடங்கில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!

By Visaka on ஆடி 6, 2026

Spread the love

தஞ்சாவூர் அருகே ஆர். சுத்திப்பட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில், திடீரென நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆர்சுத்திப்பட்டைச் சேர்ந்த சின்னப்பொண்ணு (51) என்ற அந்த தொழிலாளி, அடுக்கப்பட்டிருந்த மூட்டைகளின் இடுக்கில் சிக்கி மூச்சுத்திணறி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் சகுந்தலா என்ற மற்றொரு பெண் தொழிலாளி பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துயர சம்பவம் குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை, உரிய நேரத்தில் அரவைக்கு அனுப்பாமல் அலட்சியமாக திறந்தவெளியிலேயே அடுக்கி வைத்திருந்ததே இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்று புகார்கள் எழுந்துள்ளன. “தமிழக அரசின் இந்த நிர்வாக அலட்சியத்தால் தான் ஒரு ஏழைத் தொழிலாளியின் உயிர் பறிபோயுள்ளது” என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அண்மையில் பெய்த கனமழையால் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து பாழான வேதனையே இன்னும் மறையாத நிலையில், தற்போது ஒரு உயிர்பலி ஏற்பட்டுள்ளது விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உயிரிழந்த பெண் தொழிலாளியின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி அரவைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.