திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வார்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் இதுகுறித்து கல்லூரி தாளாளர் மற்றும் ஆசிரியர்களிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், அவர்கள் வார்டன் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, புகார் அளித்த மாணவிகளைச் சாதிப் பெயரைக் கூறி இழிவுபடுத்தியதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறைப்படி புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், சாதி ரீதியாக இழிவுபடுத்திய குற்றத்திற்காகக் கல்லூரி தாளாளர் செல்வகுமார் உட்பட 6 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
